பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கும் எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தாயக செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (28) கல்லடி பாலத்தில் இருந்து இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பமானது.
பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம், அரசை பாதுகாக்கும் புதிய சட்டம் வேண்டாம், இந்த நாட்டுக்குள் இருக்கும் குற்றவியல் சட்டம் போதும், பயங்கரவாத தடைச் சட்டம் என்ற பெயரில் இழந்த உயிர்கள் போதாதா, மக்களை ஒடுக்குகின்ற எந்த சட்டமும் வேண்டாம், சொந்த நாட்டு மக்களை பயங்கரவாதமாக பார்க்கும் சட்டம் எதற்கு போன்ற சுலோகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய நிலையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஆரம்பித்தனர்.
அறிக்கை பிரகடனம்
இவ்வாறு ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அங்கிருந்து அரசடி வீதி சுற்று வட்டத்தையடைந்து அங்கிருந்து மட்டக்களப்பு தலைமையக காவல் நிலைய வீதி சுற்று வட்டத்தையடைந்து காந்தி பூங்காவை சென்றடைந்தது.

காலை 11.30 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கு அறிக்கை பிரகடனம் செய்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், காணாமல் போனோரின் உறவுகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |