விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி தலவாக்கலையில் போராட்டம்
நுவரெலியா - தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்றிரவு (01) முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செல்வநாதன் புஸ்பகுமார் என்ற 28 வயதான இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (31) இரவு உயிரிழந்தார்.
இரு இளைஞர்கள் காயம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இளைஞர்கள் குழு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்தனர்.
இதன்போது பிரதான பாதையில் வருகை தந்த ஜீப் வண்டி ஒன்று திடீரென இளைஞர்கள்மீது மோதியுள்ளது. இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வீதியை மறித்து போராட்டம்
இந்தநிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் நுவரெலியாவில் இருந்து நேற்று தலவாக்கலை பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

இதன்போது பல முச்சக்கர வண்டிகளும் அணிவகுத்து வந்த நிலையில் சடலம் தலவாக்கலை நகரை வந்தடைந்த பின்பு உறவினர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதிக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன் சுமார் அரை மணிநேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்தது.
சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 10 மணி நேரம் முன்