இடமாற்றப்பட்ட கணித ஆசிரியர்... பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது : வெடித்த மக்கள் போராட்டம்
புதிய இணைப்பு
கொழும்பு - பம்பலப்பிட்டி பெண்கள் பாடசாலை மாணவியின் மரணத்திற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ஆசிரியரை கொழும்பிலிருந்து புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
குறித்த போராட்டம் புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு முன்பாக இன்று (09) காலை இடம்பெற்றது.
டில்ஷி அம்ஷிகா எனும் மாணவி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், சந்தேக நபராக கருதப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
பாரிய குற்றச்சாட்டு தொடர்புடைய ஆசிரியர்
மேற்படி இடமாற்றம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் கடந்த 7ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த இடமாற்றம் தொடர்பாக கொழும்பு - மற்றும் வடமேல் மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும், கொழும்பு மற்றும் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் குறித்த இரண்டு அதிபர்களுக்கும் கடிதத்தின் பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாரிய குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்புடைய கணித பாட ஆசிரியரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்பதை வலியுறுத்தி புத்தளம் மக்களால் மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திதின் போது ''சீர் திருத்தப் பள்ளி அல்ல, புத்தளம்'', ''அநீதியான நியமனத்தை நீதியாக எதிர்க்கிறோம்'', ''ஒழுக்கம் கெட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்'', ''இடைநிறுத்தப்பட வேண்டிய ஆசிரியர்'', 'இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டிக்கிறோம்'', ''தவறு செய்து தண்டிக்கப்பட வேண்டிய அரச அதிகாரிகளின் சிறைச்சாலை அல்ல புத்தளம்'', 'புத்தளம் இனியும் இதனை அனுமதிக்காது'' இவ்வாறான மூன்று மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு புத்தளம் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய பின்னர், மன உளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக தற்போது நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.
“அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, “இறுதி வரை போராடுவோம்”, “கைது செய், கைது செய், கெட்டவனை கைது செய்”, “சங்கரனை கைது செய்” “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோசங்களையெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்பால் அடித்தும் தமது எதிர்பபை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் பாடசாலைக்கு முன்னால் உள்ள போக்குவரத்துப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு மாற்று வழி போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் (Colombo) தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என கோரி கொழும்பில் இன்று (08) காலை குறித்த போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்
கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் ஆரம்பமான இந்தப் போராட்டம் தொடர்ந்து இராஜேஸ்வரி கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்று அங்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதன்பின்னர் கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு பேரணியாக சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் இந்தச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் உறுதியளித்தனர்.
இறுதியாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இறந்த மாணவிக்கு தத்தமது சமய அனுட்டானங்களின் படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை நிகழ்த்தினர்.
இதேவேளை பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 18 மணி நேரம் முன்
