நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு போராட்டம் - தமிழர் தரப்புக்கு அழைப்பு
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நாளை மறுதினம் (19) ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜெனிவா விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிசார் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
எனவே, அனைத்து மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்க வேண்டும் என தென்மராட்சி குடிசார் அமைப்பின் பிரதிநிதி க.அருந்தவபாலன் அழைப்பை விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தென்மராட்சி சிவில் அமைப்பின் பிரதிநிதி க.அருந்தவபாலன் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தார்.
இவ் ஊடக சந்திப்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம், குரலற்றவர்களின் குரல் அமைப்பு, அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.