காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம்
பூநகரி - கிராஞ்சி பகுதியில் மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் இன்று (28.05.2026) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், இலங்கையில் காற்றாலை, கனிம மணல் அகழ்வு போன்ற திட்டங்களினால் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் மண்வளம் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தேசிய மக்கள சக்தி அரசாங்கம்
கடந்த கால அரசாங்கங்கள் செய்ததையே இந்த அரசாங்கமும் செய்கின்றது, கடந்த கால அரசாங்கங்கள் இனங்கண்ட இடங்களில் தான் கனிம மண் அகழ்வு, காற்றாலைத் திட்டம் போன்றவற்றை இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது.

இவ்வாறான திட்டங்களினால் மக்கள் வெகுவாக பாதிப்படைகின்றனர். இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், குடியேற்றத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை.
கிட்டத்தட்ட கிராஞ்சிப் பகுதியில் 8,000 தென்னம்பிள்ளைகளை அழித்து ஒரு அபிவிருத்தி நடக்கின்றது. அவ்வாறான ஒரு அபிவிருத்தி எமக்கு தேவையில்லை.
மக்களின் வாழ்வாதாரம்
கிராஞ்சி மக்கள் தென்னம்பிள்ளைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கின்றார்கள். அவ்வாறு 2,000 குடும்பங்கள் தென்னம்பிள்ளைகளை வாழ்வாதாரமாக நம்பி அங்கு வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசு அவற்றை அழித்து இவ்வாறு ஒரு அபிவிருத்தியைக் கொண்டு வருவதை ஏற்க மாட்டோம்.

மக்களினுடைய வளம், நிலம் சுரண்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளையும், எமது கிராமத்தினுடைய வளத்தையும், வாழ்வாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் முகமாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.” என தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் அரசியல் வாதிகள், மதத் தலைவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |