மாகாண சபைத் தேர்தல் உடன் நடத்தப்பட வேண்டும் - சிவஞானம் விடாப்பிடி
தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ( CVK Sivagnanam) தெரிவித்தார்.
இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை மாகாணசபை கூடிப் பேசுவதற்கான ஒரு கட்டமைப்பு. ஆகையினால், மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
வவுனியா வடக்கு பிரதேச சபை போல மாகாண சபையும் மாறலாம். புதிய அரசியல் யாப்பில் சில சமயங்களில் மாகாண சபையை இல்லாமல் செய்து, முழுமையான ஒற்றையாட்சி யாப்பு உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது.
மாகாணசபை முறை தான் தீர்வென நாங்கள் கூறவில்லை. அது ஒரு அடிப்படை. ஆனால் ஒரு சிலர் மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகவே ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனக் கூறுகின்றார்கள் என அவர் கூறியுள்ளார்.