ரஷ்ய : உக்ரைன் போர்! புடினின் அதிரடி உத்தரவால் பீதியில் ரஷ்ய மக்கள்
உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் படைகளை திரட்டுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையான்றில் இந்த உத்தரவு குறித்து பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்த உத்தரவால் அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன.
ரஸ்யா முழுவதும் வெடித்த போராட்டம்
ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 1 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர்.
இதனை தடுக்கும் முகமாக ரஷ்ய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட ரஷ்ய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற இளைஞர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதல் முறையாக ரஷ்ய இராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 210 நாட்களை கடந்துள்ள நிலையில், முதன் முறையாக இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தேசிய உரையின் போது புடின் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்ய இராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யா உடனான போரில் ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்ட உக்ரைன் தற்போது வேகமாக முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.