எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி நீக்கம்! காங்கிரஸ் மத்தியில் அதிர்வலைகள்
இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மத்தியில் அதிர்வலைகள்
இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் இந்த தகுதிநீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றைய நாளில் இருந்து நடைமுறையாகும் என்று மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.