அதிகார சபையாக மாறும் தொடருந்து திணைக்களம் - இந்தியாவிடம் கடன் திட்டம்
தொடருந்து சேவையை ஒருபோதும் தனியார் மயமாக்காது,தொடருந்து திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றி இலாபகரமான நிலைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (6) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும், திணைக்களம் என்ற ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்வதில் சிரமங்கள் இருப்பதால் அதனை அதிகார சபையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவிடம் கடன் திட்டம்

சில தொடருந்து பாதைகள் 10 முதல் 40 ஆண்டுகள் பழமையானது என்பதால், தடம் புரளும் அபாயம் உள்ளதாகவும், தொடருந்துக்கு வேகத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடருந்து பாதையை சீரமைக்க இந்தியாவிடம் கடன் திட்டம் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தொடருந்தை இழப்பின்றி இயக்குவது தொடர்பாக பொறியியலாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பிற தரப்பினருடன் ஏற்கனவே ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது கூறியிருந்தார்.