இலங்கைக்குக் கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்குக் கடல் வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக குடோன் ஒன்றில் பதுக்கி வைப்பதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்திய மதிப்பில் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா, சமையல் மஞ்சள், நிலக்கரி மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மரைன் காவல்துறையினர் வாகனத்துடன் இவற்றைப்பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உரிய ஆவணங்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கீழக்கரை அருகே நேற்று முன்தினம் (28-03-2026) இரவு, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைச் சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற ஒரு சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்துள்ளனர்.
அந்த வாகனத்தில் சமையல் மஞ்சள் மூட்டைகள் இருந்ததையடுத்து அதற்கான ரசீதை அதிகாரிகள் கேட்டபோது ஓட்டுநர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததால் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இருப்பினும் அதிகளவு மஞ்சள் மூட்டைகள் கொண்டு செல்லப்படுவது குறித்துச் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், இது பற்றி மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணிக்கு உடனடியாகத் தகவல் அளித்தனர்.
இதனடிப்படையில், அந்தச் சரக்கு வாகனத்தை மரைன் காவல்துறையினர் இரகசியமாகப் பின்தொடர்ந்தனர்.
வாகன பறிமுதல்
மண்டபம் வடக்குக் கடற்கரை அருகே உள்ள டி.நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் வாகனத்திலுள்ள பொருட்களை இறக்கிப் பதுக்க முயன்ற போது மரைன் காவல்துறையினர் அந்த இடத்தைச் சுற்றிவளைத்தனர்.
அப்போது சரக்கு வாகனத்தைச் சோதனை செய்த போது இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு டன் எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகள், 10,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள், 100 பண்டல் பீடி, 308 கிலோ நிலக்கரி, 56 லிட்டர் பூச்சிக்கொல்லி, 10 கிலோ ஏலக்காய் மற்றும் 60 கிலோ மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கடத்தல் பொருட்களுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், சரக்கு வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அந்த குடோனின் உரிமையாளர் ஆகிய இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரைன் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடத்தல் பொருட்கள் அனைத்தும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு, பின்னர் மண்டபம் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து படகில் இலங்கைக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.
சமையல் மஞ்சள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்படும் நிலையில் தற்போது முதன்முறையாக நிலக்கரி மூட்டைகள் பிடிபட்டுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |