ரணிலின் கனவு பலிக்காது..! தலைமறைவாக நேரிடும் - பகிரங்கமாக எச்சரிக்கை
அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களின் சுதந்திரத்தை முற்றாகப் பறித்து சர்வாதிகாரியாகச் செயற்பட முயல்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து கருத்து வெளியிடுகையில் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வானளாவிய வாழ்க்கைச் செலவு, வட்டி வீத அதிகரிப்பு மற்றும் பல இன்னல்களுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெறுவதைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அடக்குமுறையைக் கையாள்கிறது.
இந்தப் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நீதித்துறை, அரசியலமைப்புக்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை வீதிக்கு அழைத்துச் செல்வோம்.
அடக்குமுறை மூலம் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பினால் அது வெறும் கனவு.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, தம்மைப் பாதுகாக்க பல இராணுவ பிரிவுகளை வைத்திருந்தார். அதிபர் மாளிகைக்குள் பதுங்கு குழியைக் கூட வைத்திருந்தார். எனினும் மக்களின் எதிர்ப்பால் அவர் தப்பியோட நேரிட்டது.
ரணில் விக்ரமசிங்கவும் உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார். அவர் விரைவில் பதுங்குழிக்குள் தலைமறைவாக நேரிடும்.
அவரது உயர் பாதுகாப்பு வலயங்கள் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்படும். மக்கள் மீதான இந்த அடக்குமுறையை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்தப் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக சூளுரைத்துள்ளார்.