சிறிலங்காவின் பதில் அதிபராக பொறுப்பேற்றார் ரணில்! சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிபரின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் அதிபராக நியமித்துள்ளதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் மற்றும் பிரதமர் இருவரையும் பதவி விலகுமாறு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வரும் நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜுலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடுத்து, இன்று தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச சபாநாயகரிடம் அறிவித்தார்.
இருப்பினும், தனது பதவி விலகல் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இன்றி அதிபர் இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதில் அதிபராக கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.