ரணிலுடனான சந்திப்பு - கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எடுத்துள்ள முடிவு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்.பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்.பிக்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.
அதிகாரப் பரவலாக்கல்
மேலும் தெரிவிக்கையில், 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிபர் அழைத்து அதிகாரப்பரவலாக்கல் , வடக்கிலுள்ள பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாட அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் கருதப்படுவதால் அதிகாரப்பரவல் வடக்கு கிழக்கைச் சார்ந்தது.
அந்த வகையில் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாதவிடத்து, குறித்த பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எதிர்பார்த்துள்ளோம்.
கூட்டமைப்புக்கு புதிய யாப்பு
இதேவேளை, கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டுமென பிரதான கோரிக்கையை அதிபரிடம் முன்வைக்கின்றோம்” - என்றனர்.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த மாதம் புதிய யாப்பு உருவாக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் யாப்பு மற்றும் மாவட்ட மட்ட செயற்பாடு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், பா.கஜதீபன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் செயலாளர் துளசி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆர்.இராகவன், ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
