ராஜபக்சக்களின் பிரதான முகவரே ரணில்: தலை கீழான இரகசிய வாக்கெடுப்பு! பகிரங்கப்படுத்திய சுமந்திரன்
ராஜபக்சக்களின் முகவர்
ராஜபக்சக்களின் பிரதான முகவராக ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் எனவும் அவர் மூலமே ராஜபக்சர்கள் தங்கள் ரகர்வுகளை மேற்கொள்கின்றார்கள் எனவும் சிறிலங்கா அதிபர் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதித்தன்மையுடன் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபயவின் பதவி விலகலை தொடர்ந்து சிறிலங்காவின் புதிய அதிபருக்கான நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் திகதி நடைபெற்றது.
நாடாளுமன்ற இரகிசய வாக்கெடுப்பு முறையில் இடம் பெற்ற தேர்தலில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்க சிறிலங்காவின் புதிய அதிபராக தெரிவுசெய்யப்பட்டார்.
இருப்பினும் அதிபர் தேர்தலின் இறுதி கணம் வரை ரணிலை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு அதிக கட்சிகளின் ஆதரவு வெளிப்படுத்தப்பட்ட போதும் 81 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருந்தார்.
திரை மறைவில் ரணிலுக்கு வாக்கு
இந்நிலையில் இரகசிய வாக்கெடுப்பு முறை என்பதால் வெளிப்படையாக டலஸ்க்கு ஆதரவு அளித்துவிட்டு திரை மறைவில் ரணிலுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என பல்வேறு தரப்பினராலும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது என்றும் அதிபர் தேர்வு வெளிப்படையாக நடாத்தப்பட வேண்டியது ஒன்று எனவும் தெரிவித்தார்.
சிறி லங்கா அதிபர் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சி இன்று மாலை எமது உத்தியோகபூர்வ வலைதளத்தில் வெளியாகும்