நாளை முதல் மீளவும் இயங்கவுள்ள சிறிலங்கா அதிபர் செயலகம்! ரணில் விடுத்துள்ள பணிப்புரை
சிறிலங்கா அதிபர் செயலகம்
சிறிலங்கா அதிபர் செயலகம் நாளை முதல் முழுமையாக செயற்பட வைக்க சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக இயங்காத நிலையில் உள்ள அதிபர் செயலகம் நாளை முதல் மீளவும் இயங்கவுள்ளது.
மேலும், போராட்டக்காரர்களால் ஆக்கிரமித்த போது கட்டடத்தின் சில பகுதிகளில் சேதமடைந்துள்ளதாகவும் கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலகத்தின் உயர் அதிகார் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சேகரிக்கப்படும் குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள்
இதேவேளை, சிறிலங்கா செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக கொழும்பு மத்திய காவல்துறை அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் விசேட குற்றப் பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கோட்டை காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது என்றும் குற்றவியல் அதிகாரிகள் மற்றும் சிறப்பு கைரேகை புலனாய்வு அதிகாரிகள் மூலம் தடயவியல் ஆதாரங்கள் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் சேகரிக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி அன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்டதுடன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.