ஆற்றில் மிதந்து வந்த பெண் சிசுவின் சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறையினர்
பொகவந்தலாவை, லொய்னோன் கெசல்சமுவ ஓயாவில் இருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (22) இடம்பெற்றதாக பொகவந்தலாவை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரக்கறித் தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு பொகவந்தலாவ காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
ஏழு மாதங்களில் பிறந்த குழந்தை
குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்ட தடயவியல் காவல்துறையினர் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் பணிப்புரைக்கு அமைய கெசல் கமுவ ஒயாவில் இருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிசு ஏழு மாதங்களில் பிறந்த குழந்தையென ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.