இன்று முதல் வாகனங்களுக்கான கடன் தொகை குறைப்பு! மத்திய வங்கி அதிரடி
மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் தொகையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி எடுத்த தீர்மானம் இன்று (25) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் எல்லை 70% இலிருந்து 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கார், எஸ்.யூ.வி (SUV), வான் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் அதிகபட்ச கடன் எல்லை 50% இலிருந்து 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் நிலவரம்
இதன் மூலம் தனிப்பட்ட வாகனங்களுக்கான கடன் வசதி 10% ஆல் குறைவடைந்துள்ளது. மத்திய வங்கி கடந்த 2025ஆம் ஆண்டிலும் இந்த வாகனக் கடன் எல்லைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த ஆண்டின் ஜூலை 17ஆம் திகதி நிலவரப்படி, வர்த்தக வாகனங்களுக்கான கடன் எல்லை 80% ஆகவும், தனிப்பட்ட கார்கள் மற்றும் வான்களுக்கான அதிகபட்ச கடன் எல்லை 60% ஆகவும் காணப்பட்டது.
புதிய கடன் எல்லைகள்
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, கடந்த 2025 நவம்பர் 7ஆம் திகதி இந்த வரம்புகள் மீண்டும் திருத்தப்பட்டன. அதற்கமைய, வர்த்தக வாகனங்களுக்கான கடன் எல்லை 70% ஆகவும், தனிப்பட்ட வாகனங்களுக்கான கடன் எல்லை 50% ஆகவும் குறைக்கப்பட்டது.

தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த மதிப்புகள் மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்டு, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தக வாகனங்களுக்கு 60% மற்றும் தனிப்பட்ட வாகனங்களுக்கு 40% என்ற புதிய கடன் எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |