வடக்கில் இராணுவ தரப்புக்கு சாதகமாக மாறிய தமிழர்களின் நடவடிக்கை
வடக்கிலுள்ள இராணுவத்தை அகற்றுமாறு தமிழ் அரசியல்வாதிகளே கோருகின்றனரே தவிர, தமிழ் மக்கள் அல்லவென கடும்போக்குவாத சிங்கள பேரினவாத கட்சியான பிவித்துறூ ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பருத்தித்துறை கற்கோளம் பகுதியில் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் இராணுவ அகற்றம்

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வடக்கில் இராணுவத்தை அகற்றுவது தொடர்பிலும் அதிபர் கருத்து வெளியிட்டார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது, 26 ஆயிரத்து 812 ஏக்கர் காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் படிப்படியாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் படிப்படியாக அத்தியாவசியற்ற காணிகளை விடுவிக்கப்பட்டதன் பிரதிபலமான, 22 ஆயிரத்து 919 மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இராணுவத்தினர் யுத்தத்தின் போது பாவித்த நிலங்களில் 85 வீதமானவை மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம்களை நடத்திச் செல்லப் போதுமான அத்தியாவசியமான இடங்களை மாத்திரமே இராணுவத்தினர் வைத்துள்ளனர்.
எனினும் தற்போதைய அதிபரின் நிர்ப்பந்தத்தினால், மேலும் 377 ஏக்கர் காணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மக்களிடம் கையளிக்க இராணுவம் இணங்கியுள்ளது. இதனால், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலத்தின் அளவு 87 வீதமாக உயர்வடையும்.
தற்போது 13 வீதமான நிலப் பகுதிகளிலேயே இந்த இராணுவ முகாம்கள் உள்ளன.
| இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் - யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) |
வலுக்கட்டாயப்படுத்தும் கூட்டமைப்பினர்

எனினும் அதிபர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு இந்த இராணுவ முகாம்களை மேலும் அகற்றுமாறு வலுக்கட்டாயப்படுத்துகின்றார்.
ஆகவே மேலும் விடுவிக்கப்படக் கூடிய இடங்களை அடையாளம் காணுமாறு மேஜர் ஜெனரல் தலைமையில் ஜுலை மாதம் 5 ஆம் திகதி செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜுலை மாதம் 22 ஆம் திகதி இது தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டும் என அவர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கும் குறைவான நாட்களே இந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்கு இராணுவத்திற்கு உள்ளது.
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாக இராணுவத்திற்கு கடுமையான நெருக்கடிகளை அதிபர் கொடுத்துள்ளார்” - என்றார்.