டொலர்களில் எண்ணெய் வர்த்தகம் செய்ய ஈரானுக்கு அமெரிக்கா அனுமதி!
அமெரிக்காவால் முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு ஆய்வாளரும், Amwaj.media தளத்தின் ஆசிரியருமான முகமது அலி ஷபானி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி ஈரான் தனது மசகு எண்ணெய் விற்பனைக்கான தொகையை அமெரிக்க டொலர்களில் பெற்றுக்கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
மிகப்பெரிய வெற்றி
இது தெஹ்ரானுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் நிபுணர்கள் அளவிலான இந்த பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தின்போது கூட ஈரான் தனது எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்க டொலர்களில் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தற்போது அமெரிக்கா வழங்கியுள்ள இந்தச் சிறப்பு விலக்கு, ஈரானின் பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் வலு சேர்க்கும் என ஷபானி குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பல விவாதத்திற்குரிய சிக்கல்கள் நீடித்தாலும் தற்போதைய சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த (வலுவான) நடவடிக்கைகள் இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |