யாழில் வைத்தியசாலை ஒன்றுக்கு மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை!
யாழ்ப்பாணம் (Jaffna)- வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் (N. Vethanayagan) குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கட்டைக்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் ஆளுநருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிரமங்களை எதிர்கொள்ளும் வைத்தியர்
நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் உரிய மருந்தாளர் இன்றி கடமையில் இருக்கும் வைத்தியர் சிரமங்களை எதிர்கொள்கின்றார் என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோயாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தகுதியான ஒரு மருந்தாளரை நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு உடன் நியமிக்குமாறு கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

