இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்திய தலையீடு - கூட்டமைப்பினர் வெளியிட்ட தகவல்
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறையை உருவாக்க இந்திய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியா இல்லத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல் துறை முதன்மை செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோரோடு தமிழ் தேசியகூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர். எம்.எ.சுமந்திரன் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வை நிறைவேற்றுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த கூட்டமைப்பினர், தொடர்ந்தும் இந்தியா அந்தப் பங்களிப்பைச் செய்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.