பசிலின் ஊடுருவல் நகர்வு - ஆட்டம் காணப்போகும் சிறிலங்கா அரசியல்
சிறிலங்காவில் அரச எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக பதவி விலகிய பசில் ராஜபக்ச தனது கட்சியை பாதுகாப்பதற்காக மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுபவர்களை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய தவறு செய்யவில்லை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக் காலத்தில் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என அவரது சகோதரரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் இன்றைய நெருக்கடி நிலைக்கு ராஜபக்ச குடும்பத்தினர் பொறுப்புக்கூற வேண்டுமென அனைவரும் குற்றஞ்சாட்டுவது ஒரு தவறான விடயம் எனவும், அவர்கள் இல்லாவிட்டால் நாடு இன்று இந்த நிலையில் கூட இருந்திருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும், நாட்டில் எதிர்பாராத விதமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் காரணமாக அனைத்தும் தடைபட்டதாக பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிக்கான வேலை
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவு சரிவர வழங்கப்பட்டிருந்தால் தற்போது அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதெனவும் அவருடைய மகனை பார்க்க அவருக்கு உள்ள உரிமை பறிக்கப்படக் கூடாதென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் பதவி வகிக்க சட்டப்படி தமக்கு உரிமை இல்லாவிட்டாலும் கட்சிக்காக தாம் வேலை செய்வதாக பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.