யாழ்.வல்லையில் வழிப்பறி கொள்ளை -மடக்கி பிடிக்கப்பட்ட இருவருக்கு மக்கள் ‘நல்ல கவனிப்பு’
வழிப்பறி கொள்ளை
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலிப் வல்லைப்பகுதியில் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொது மக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இறைச்சி வியாபாரி ஒருவரின் 3 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு நையப்புடைக்கபட்டு பின்னர் அச்சுவேலி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கத்தி முனையில் அச்சுறுத்தல்
புத்தூர் பகுதியில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர், வல்லை பகுதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர்.
சாமர்த்தியமாக செயல்பட்ட இறைச்சி வியாபாரி ஒரு இளைஞனை துரத்திப் பிடித்து நையப் புடைத்தார். பின்னர் குறித்த பிரதான வீதியில் பயணித்த நபர்களும் பிடிபட்ட இளைஞனை முறையாக கவனித்தனர்.
தப்பிச்சென்ற இன்னொரு இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது கையும் மெய்யுமாக இளைஞர்களினால் பிடிக்கப்பட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம்
இதன்போது குறித்த இளைஞனின் மர்ம உறுப்புக்குள்ள் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது .
வீதியில் வைத்து இளைஞர்கள் முறையாக கவனிக்கப்பட்ட பின்னர் அச்சுவேலி கால்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இளைஞர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

