உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செயலாக்க சஹ்ரானுக்கான அமைக்கப்பட்ட பாதை
ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சுரேஷ் சலே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைப் பயன்படுத்தி பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்ட குழுக்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
அந்த விசாரணைகளின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச மீது நீதிமன்றம் பயணத் தடை விதித்ததால் பல அரசியல் குழுக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்திருந்தன.
சஹ்ரனின் செயல்பாடுகளை விசாரித்து வந்த காவல்துறையின் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவை முற்றிலுமாகக் கலைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரிக்கும் ஒரு அறிக்கை குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று விவரித்துள்ளது.
தலைமறைவான சஹ்ரான்
சஹ்ரானுக்கான பாதை எப்படி அமைக்கப்பட்டது, என்பதை குறித்த ஊடகம் விவரித்துள்ளது.

“ 2016 டிசம்பர்: காத்தான்குடியில் சஹ்ரான் ஹஷீம், ஐ.எஸ். (IS) அமைப்புக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பி, பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வெறுப்புரை நிகழ்த்தியதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு முதல் முறையாக தகவல் கிடைத்ததையடுத்து, அதிகாரப்பூர்வ விசாரணைக் கோப்பு தொடங்கப்பட்டது.
2017 மார்ச் 10: காத்தான்குடி அலீம் சந்தியில் சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்புக்கும், சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பினருக்கும் இடையில் ஆயுத மோதல் ஏற்பட்டது.
2017 மார்ச்–ஜூன்: இந்த மோதலைத் தொடர்ந்து சஹ்ரான் தலைமறைவானார். அவர் ஆயுத நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகக் காட்டும் ஆதாரங்களை TID அதிகாரிகள் இந்தக் காலகட்டத்தில் கண்டறிந்தனர்.
2017 ஜூலை 10: சஹ்ரான் ஹஷீமை கைது செய்வதற்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து முதல் பிடியாணை பெறப்பட்டது.
2018 ஏப்ரல் 8: சஹ்ரான் தொடர்பான விசாரணைகளிலிருந்து TID-யை நீக்குமாறு தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.எனினும், அந்தக் கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படாமல் விசாரணைகள் தொடர்ந்தன.
கொலை செய்யும் சதி கருத்து
2018 ஜூலை 2: சஹ்ரானை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் 08ஆம் இலக்க நீதிமன்றத்தில் இருந்து திறந்த பிடியாணையும், சர்வதேச நீல பிடியாணையும் பெறப்பட்டது. இது பின்னர் சர்வதேச சிவப்பு அறிவிப்பைப் பெறுவதற்கான முதல் கட்டமாக இருந்ததாக அந்நாள் TID பணிப்பாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவின் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 செப்டம்பர் 12: இதற்கு முன்பு பொதுமக்கள் மத்தியில் அறியப்படாத நாமல் குமார என்ற நபர் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்யும் சதி தொடர்பான ஒலிப்பதிவுகள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார். பின்னர், நாமல் குமார ஜனாதிபதி செயலகத்திலிருந்து சம்பளம் பெற்றவர் என தெரியவந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அந்நாளைய காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதனை சாட்சியமாக குறிப்பிட்டிருந்தார். சஹ்ரான் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படாததால், TID சஹ்ரானையும் அவரது குழுவினரையும் கைது செய்வதற்காக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பிடியாணைகளை பெற்றது.
நாமல் குமார நடத்திய ஊடகச் சந்திப்பில், அவர் தனது குற்றச்சாட்டுகளை TID பணிப்பாளர் நாலக டி சில்வாவை நோக்கி முன்வைத்தார். மேலும், அமித் வீரசிங்க, டேன் பிரியசாத் மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரைத் தனது ஆதரவாளர்களாகக் குறிப்பிட்டார்.
முடக்கப்பட்ட விசாரணை
நாமல் குமாரின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு TID பணிப்பாளர் நாலக டி சில்வாவை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து TID யில் பணியாற்றிய அதிகாரிகள் பலர் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் பின்னர் மனநலக் கோளாறுக்கு ஆளாகி அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. நாலக டி சில்வா கைது செய்யப்பட்ட பின்னர் விசாரணைக் குழு கலைக்கப்பட்டதால், ஏற்கனவே பெறப்பட்டிருந்த கைது வாரண்டுகளை நடைமுறைப்படுத்த , சஹ்ரானின் நிதி வலையமைப்பைத் தொடர்ந்து விசாரிக்கவும் பொறுப்பான அதிகாரிகள் இல்லாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒலிப்பதிவுகளை வெளியிட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நாமல் குமாருக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாக முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, 2020 ஒக்டோபர் 9 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தபோது தெரிவித்தார்.
சஹ்ரானின் மூலம் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் பெரிய சதித்திட்டத்திற்கு இருந்த மிகப்பெரிய தடையாக TID-யின் விசாரணைகள் இருந்தன; அந்த விசாரணைகள் முடக்கப்பட்டதன் மூலம் அந்தத் தடை நீக்கப்பட்டது” என்று சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்