பிரித்தானியாவின் முக்கிய புள்ளியை தேடப்படும் பட்டியலில் சேர்த்த ரஷ்யா!
பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் (Ben Wallace) மீது ரஷ்ய உள்துறை அமைச்சகம் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடப்படும் நபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்களை ரஷ்யா வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு ராணுவ உதவி
2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்து, 2023 ஓகஸ்ட் வரை பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய பென் வாலஸ், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டு வார்சா பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் முக்கியமான பாலத்தைத் தகர்க்க உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்றும், அதன் மூலம் ரஷ்யாவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வாலஸ் பதில்
இந்தக் கருத்துக்களுக்காக அவர் மீது சர்வதேச அளவில் தேடப்படும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலளித்துள்ள பென் வாலஸ், "கிரெம்ளின் மாளிகை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோல்வியடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த விசித்திரமான செயல் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |