ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் - பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது இலங்கை
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறானது என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது நாட்டின் சுற்றுலாத் துறையை மேலும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சுற்றுலா நடத்துனர்களின் சங்கத்திற்கும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஹரின் பெர்ணாண்டோ, அவசர உணவுப் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படாத பட்சத்தில், அடுத்த சில மாதங்களில் உணவு நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனக் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் 2 அல்லது 3 மாதங்கள் செல்லும் எனவும், அதனால் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பிற நிறுவனங்களிடமிருந்து கடன் உதவியை பெறும் தேவை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிர்வரும் 3 மாதங்களுக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அந்த நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் நாட்டின் நிலை மோசமடையலாம் அவர் சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்காவிட்டால் இலங்கையின் நிலமை இன்னும் மோசமடைந்திருக்கும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

