இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
மக்கள் உரிமை, நீதி, சமத்துவம் மற்றும் அமைதிக்காகத் தன் வாழ்நாளெல்லாம் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவருமான அமரர் இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று (11.07) சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் மிக எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம், பொதுச் செயலாளர் சுமந்திரன், நாடாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
மலர் அஞ்சலி
நிகழ்வின் தொடக்கத்தில், மறைந்த பெருந்தலைவர் அமரர் இரா. சம்பந்தனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி மிக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் (மாநகர சபை மற்றும் பிரதேச சபை) பிரதிநிதிகள் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், சம்பந்தனின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் பங்களிப்பினை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளர்.
"அவர் விழைத்த ஒற்றுமை, நீதி மற்றும் ஜனநாயகப் பாதை என்றும் எம் நினைவில் நிலைத்திருக்கும்" அவர் காட்டிச் சென்ற நேர்மையான, ஜனநாயக வழியிலான அரசியல் பாதையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வரை ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான திருகோணமலை மாவட்டப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |