நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தசானி கவலை தெரிவித்துள்ளார்.
சிறையில் வெடித்த இந்த பயங்கர வன்முறையும், பிற சிறைகளில் கைதிகளுக்கு எதிராகக் காவலர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வெளிவந்துள்ள அறிக்கைகளும் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறை அதிகாரிகள் உள்ளிட்ட பல டசின் கணக்கானோரின் குடும்பங்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதைக் காணவும் தகுதியுடையவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
சுதந்திரமான விசாரணை
இச்சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையானதாகவும் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த வன்முறையானது இலங்கையின் தடுப்புக்காவல் முறையிலுள்ள கட்டமைப்புச் சிக்கல்களைக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைப்பது, சிறைகளில் உள்ள அதிக நெரிசல் மற்றும் போதிய வசதிகள் இல்லாத சூழல் போன்றவையே இந்த முக்கியப் பிரச்சினைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சீர்திருத்த செயல்முறை
அத்துடன், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அதிகளவிலான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பலரைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாகச் சுகாதாரம் சார்ந்த அணுகுமுறைகள் மூலம் சீர்திருத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட கைதிகள் மாற்றப்பட்டு, சித்திரவதை மற்றும் பிற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை உட்பட அனைத்து தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் தடையற்ற முறையில் சென்று பார்வையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரிகள் முழு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |