அமைதி முயற்சிக்கு புதிய திருப்பம்: ரஷ்யா அதிரடி பரிந்துரை
உக்ரைன் - ரஷ்யா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன்- ரஷ்யா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது.
இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கைதிகள் பரிமாற்றம்
இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டதுடன் இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
இந்தநிலையில், வருகின்ற திங்கட்கிழமை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையை உக்ரைன் ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் ஆலோசகர், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள உக்ரைன் தயாராக இருக்கின்றது.
ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறோம் இதன் அர்த்தம், ரஷ்யாவின் நிபந்தனையை பெறுவது முக்கியமானது.
இன்னும் மூன்று நாட்கள் உள்ளது, நிபந்தனைக்கான வரைவை தயாரித்து அனுப்புவதற்கு போதுமான நேரம் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
