உக்ரைன் மீது சிறப்பு படை நடவடிக்கை - தயாராகும் புடின்
வாக்னர் வாடகை படையினரின் கிளர்ச்சிக்கு மத்தியில் உக்ரைன் தொடர்பான திட்டங்களை தொடர்வதில் ரஷ்யா நம்பிக்கையுடன் உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான சிறப்பு படை நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதில் தாக்குதல்
இதேவேளை, உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட பதில் தாக்குதல்களில் முன்னேற்றம் கண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
இந்த நிலையில் நான்கு பகுதிகளில் உள்ள முன்னரங்க பகுதிகளில் உக்ரைனின் புதிய தாக்குதல்களை தோற்கடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
தமது நிலைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் முயற்சித்து வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பஹ்மூத் பகுதியில் மாத்திரம் 10 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
இதனிடையே உக்ரைன் தலைநகர் கீயேவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வடைந்துள்ளது.
நேற்றிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒன்பது பேர் காயம்
ரஷ்யாவின் ஏவுகணைகளை வழிமறித்து அழித்த போது வீழ்ந்த சிதைவுகளால் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கீயேவ் மீது அண்மைய வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் செறிவான தாக்குதல்களில் ஒன்றாக இது அமைந்திருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
50 குரூஸ் ரக ஏவுகணைகள் மூலமும் மூன்று ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் ரஷ்யா இந்தத் தாக்குதல்களை நடத்தியிருந்த போதிலும் 41 குரூஸ் ரக ஏவுகணைகளையும் மூன்று ஆளில்லா விமானங்களையும் தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
பொதுவெளியில் பாதுகாப்பு அமைச்சர்
இதேவேளை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜே சொய்கு உக்ரைனில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
வாக்னர் படையினரின் கிளர்ச்சியை அடுத்து முதல் முறையாக பொதுவெளியில் பாதுகாப்பு அமைச்சர் தோன்றியுள்ளார்.
