கேந்திரத்திலிருந்து ரஷ்யத் துருப்புகள் அதிரடியாக வெளியேற்றம் - உக்ரைன் வெற்றிக் களிப்பில்...
உக்ரைனின் பாம்பு தீவில் இருந்து தனது படைகள் மீளப்பெற்றுக்கொள்வதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தமக்கு கிடைத்த வெற்றி என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
கருங்கடலில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பாம்பு தீவு காணப்படுகின்றது.
இந்தத் தீவானது, உக்ரைன் மீதான படை நடவடிக்கையின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
பாம்பு தீவிலிருந்து ரஷ்யத் துருப்புகள் வெளியேற்றம்
இந்த நிலையில் நல்லெண்ணத்தின் சமிக்ஞையாக, ரஷ்ய ஆயுதப்படைகள் பாம்பு தீவில் தங்கள் பணிகளை நிறைவுசெய்து, தமது சொந்த படைத்தளத்திற்கு திரும்புவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த தீவின் மீதான தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியதை தொடர்ந்து ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
உக்ரைனில் இருந்து விவசாயப் பொருட்களை அனுப்புவதற்கான மனிதாபிமான வழித்தடத்தை ஏற்படுத்தும் ஐ.நாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா தடையாக இல்லை" என்பதை உலகிற்கு நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டு தமது படைகள் பாம்பு தீவில் இருந்து மீளப் பெறப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
உலகிற்கு நிரூபிக்கும் ரஷ்யாவின் திட்டம்
தானிய ஏற்றுமதியைத் தடுக்கும் வகையில் உக்ரைனிய துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதாக உக்ரைனும் மேற்குலக நாடுகளும் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இதன்காரணமாக உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உணவு பற்றாக்குறை, பசி மற்றும் அரசியல் ரீதியான உறுதியற்ற நிலைமைகள் மேலும் மோசமாக்குகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.