பொருளாதார நெருக்கடியால் கார் சாரதியாக பணியாற்றிய ரஷ்யா அரசதலைவர்
ரஷ்யா அரசதலைவர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) 30 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியால் கார் சாரதியாக பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.
சோவியத் ஒன்றியத்தின் உளவு படையில் பணியாற்றிய ரஷ்யாவின் தற்போதைய அரசதலைவர் புடின் இப்போதும் சோவியத் ஒன்றியத்தின் கோட்பாடுகளை நம்புகிறார்.
இந்த நிலையில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியின் போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக தான் கார் சாரதியாக பணியாற்றியதாக புடின் தற்போது தெரிவித்துள்ளார்.
சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி குறித்த ஆவணப்படம் ஒன்றின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை மிகப்பெரும் அரசியல் பேரழிவாக கருதுகிறேன்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது குறித்துப் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதுதான் நடந்தது.
சோவியத் ஒன்றியத்தின் சரிவு என்பது வரலாற்று ரஷ்யாவின் முடிவை உணர்த்துகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சி என்பது பெரும்பாலான பொதுமக்களுக்கு மிகப் பெரிய சோகமாகவே இருந்தது.
அந்த நேரத்தில் நான் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. இதற்காக நான் தனியார் நிறுவனத்தில் கார் சாரதியாக பணியாற்றினேன் என மேலும் தெரிவித்துள்ளார்.