இறுதிநேர சட்ட நடவடிக்கை ருவாண்டாவிற்கு புகலிடதாரிகளை கொண்டு செல்லும் பிரிட்டனின் முயற்சி இரத்து
இங்கிலாந்தில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லவிருந்த முதல் விமானம் கடைசி நேர சட்டப் போராட்டத்தை அடுத்து இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் (ECtHR) தலையீட்டை அடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. உள்துறை செயலர் பிரிதி படேல், விமானம் நிறுத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் தான் "ஏமாற்றம்" அடைந்ததாகவும் ஆனால் அதை தடுக்க முடியாது என்றும் "அடுத்த விமானத்திற்கான பயண தயாரிப்பு இப்போது தொடங்குகிறது" என்றும் கூறினார்.
வில்ட்ஷயரில் உள்ள இராணுவ விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட இருந்தது, ஆனால் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ECtHR மற்றும் லண்டனில் உள்ள நீதிமன்றங்களின் பல இணைக்கப்பட்ட தீர்ப்புகளுக்குப் பிறகு, அனைத்து பயணிகளும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.