தேர்தலை நடத்தாதிருப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் - சஜித் பகிரங்கம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான யானை, காகம், மொட்டு ராஜபக்ச அரசாங்கம் தேர்தலை நடத்தாதிருப்பதற்கு பாரிய சதித்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொரளை குப்பியவத்தையில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏகாதிபத்திய அரசாங்கம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை வழங்காமல், நீதிபதிகளை விமர்சனம் செய்தும்,அவர்களை குறைமதிப்புச் செய்தும் மிரட்ட முயற்சிக்கின்றது.
நாட்டு மக்கள் பட்டினியால் வீதியில் இறங்கும் போது அரச மிருகத்தனத்தையும் பயங்கரவாதத்தையும் பிரயோகிப்பதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த ஏகாதிபத்தியத்தைப் பார்த்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருக்க முடியாது.
எனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து இந்த சர்வாதிகார அரச பயங்கரவாதத்தை தோற்கடிக்க வீதியில் இறங்கி ஜனநாயக ரீதியிலான அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
தேர்தலை நடத்தினால் படுதோல்வி
நாட்டை ஆட்சி செய்யும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்க தரப்பு மக்கள் பலம், மக்கள் ஆணை, பொது மக்களிடம் செல்லல் மற்றும் தேர்தலுக்கு அஞ்சுகின்றனர்.
தேர்தலை நடத்தினால் தாம் படுதோல்வி அடைவோம் என்று தெரிந்தே தேர்தலை ஒத்திவைத்தி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கோழைத்தனமான தலைமை, தேர்தலுக்கு முகம் கொடுக்க அஞ்சும் முதுகெலும்பில்லாத தலைமை எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தாம் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
