"முட்டாள் தனமான முடிவுகளை எடுக்க வேண்டாம்" அதிபர் ரணிலுக்கு சஜித் வலியுறுத்தல்
சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் முட்டாள் தனமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ரணில் தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நல்ல விடயங்களை வென்றெடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று கூடிய எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
தங்கள் சொந்த எண்ணங்களின் பிரகாரம் அவசரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தால் சொல்லப்படுவதை ஒத்துக்கொள்ளும் சூழ்நிலையில், நாட்டிற்கு நடந்த அழிவுகள் கண்ணெதிரே தெரிகின்றன,
இப்போதாவது அவசர முடிவுகள் எடுக்காமல், எதிர்க்கட்சிகளுக்கு அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி, எதிர்க்கட்சியும் அரசாங்கமும் ஒரே குரலில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணைய வேண்டும், சர்வதேச சமூகத்தின் முன் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்காதீர்கள்.
நல்ல விடயங்களை வென்றெடுப்போம்
நாம் ஒன்றிணைந்து சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நல்ல விடயங்களை வென்றெடுப்போம். கட்சி நிறம், மதம், சாதி வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் ஒரே குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்குத் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தினால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைவரின் வைப்புத் தொகைகளையும் பாதுகாக்க முடியும், இதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் பூரண ஆதரவை வழங்குகிறோம்.
சரியானதற்கு சரி என்று கூறினாலும் தவறானவற்றுக்கு உடன்படப்போவதில்லை, பல்வேறு தந்திர மந்திரங்களில் சிக்கிக் கொள்ளாமல் தாம் எடுத்த முட்டாள்தனமான முடிவுகளை அவ்வாறே ஒப்புக் கொண்டு, புதிய வழியில் முன்னோக்கிச் செல்ல ஒன்றுபட வேண்டும்,
இந்நாட்டு மக்களின் வைப்புத் தொகைகளின் பெறுமதியைப் பாதுகாக்கத் தயாராக இருந்தாலும் அரசாங்கம் சொல்வதெற்கெல்லாம் கை தூக்கத் தயாராக இல்லை.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்துடன் தொடர்பான தரவுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியால் அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அவர் அதனை வழங்கவில்லை,
ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தால், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தம் மக்கள் தரப்பில் வலுப்படுத்தி முற்போக்காக செயல்படுத்தும் சாத்தியம் இருந்தும், அது நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
