தமிழ்மக்களின் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி அமைப்பே சரியான தீர்வு - புளொட்டின் பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானம்
இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டி அமைப்பே சரியான தீர்வாக இருக்க முடியும் என புளொட்டின் பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாக தெரிவு
இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பத்தாவது பொதுச்சபை கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
அந்த வகையில் கட்சியின் செயலாளராக நா.இரட்ணலிங்கமும், பொருளாளராக க.சிவநேசனும், ஊடகப் பிரிவின் தலைவராக பா.கஜதீபனும், சர்வதேச பேச்சாளராக செ.ஜெகநாதனும் தெரிவாகியுள்ளனர்.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இயங்குபவர்கள் உட்பட145 பேராளர்கள் வரை கலந்துகொண்டிருந்ததுடன், தீர்மானங்களும் எட்டப்பட்டது.
பொதுச் சபைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கும் விளக்கமளித்தார்.