பதவியை இராஜினாமா செய்யவும் தயார் - சரத் வீரசேகர சூளுரை
தென்னிலங்கையின் பிரபல சிங்கள நடிகையான பியுமி ஹன்சமாலிக்கு தான் ஆடைகளைக் கொண்டுசென்று கொடுத்த விடயம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சூளுரைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துவதாகவும், முடிந்தால் அதனை நிரூபிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையின் பிரபல்யமான சிங்கள நடிகையான பியுமி ஹன்சமாலி கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பிறந்தநாள் கொண்டாத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அண்மையில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறித்த நடிகைக்கு ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவியதாக தகவல்கள் பரவியிருந்தன. எனினும் இந்த விடயத்தை அமைச்சர் வீரசேகர தொடர்ந்து மறுத்து வருகின்றார்.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சரத் வீரசேகர தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதோடு, இந்தக் குற்றச்சாட்டை சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் முடிந்தால் இந்த விடயத்தை நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.