உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி "நாகரிகமான பிரஜை - முன்னேற்றகரமான மனித வளத்தை" உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு
அதாவது, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர் சர்வதேச தரவரிசையில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை குறியீடுகளில் முதல் 500 இடங்களுக்குள் இருக்கும் மற்றும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்து அதிகபட்சமாக 04 ஆண்டுகளுக்கு பட்டப்படிப்புகளை முடிக்க உதவித்தொகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 200 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளதுடன் 2025 ஆம் ஆண்டுக்கு அதன் முதல் கட்டத்தின் கீழ் 20 முதல் 50 மாணவர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவு
க.பொ.த. (உயர்தர) பரீட்சையின் முக்கிய பாடப் பிரிவுகளில் அதிக இசட்-மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதுடன் அந்த விண்ணப்பங்களில் இருந்து பொருத்தமான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்ட நிபுணர் நேர்காணல் குழுவால் செய்யப்படும்.
அதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற முறையில் பிரதமர் முன்மொழியப்பட்ட உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்த சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
