தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயநல அரசியல் அம்பலம் -அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்கான தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சுயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இன்று வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என அவர் குறிப்பிட்டார்.
இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக

அத்துடன் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக, கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
தமது நிலைப்பாட்டினை மாற்றிய

ஆனால் மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டினை அவர்கள் மாற்றியிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.