வரலாற்று சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் மகோற்சவம் - விசேட அறிவிப்பு
வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் , ஆலய சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுச்சுகாதாரம் சார்ந்த பொது அறிவுறுத்தல்களை வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பொதுச்சுகாதார பரிசோதகர் விடுத்துள்ளார்.
விற்பனை செய்வது முற்றாக தடை
அவையாவன, 1. உணவு கையாளும் நிலையங்கள் (உணவகங்கள், இனிப்பு கடைகள்,மிக்சர் கடைகள்,ஐஸ்கிறீம் கடைகள்,கருஞ்சுண்டல்,தும்புமிட்டாய்,ஏனையவை) தத்தமது உள்ளூராட்சி சபைகளின் நடப்பாண்டிற்கான வியாபார அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.
2. உணவு கையாளும் நிலையங்களில் கடமைபுரிபவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் கடமை புரிபவர்கள் அனைவரும் நடப்பாண்டிற்கான மருத்துவ சான்றிதழ் வைத்திருப்பதுடன் தனிநபர் சுகாதாரம் பேணுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதுடன் தற்காலிக கடமையில் ஈடுபடுபவர்கள் தற்காலிக மருத்துவ சான்றிதழ் பெற வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச் சுகாதார பரிசோதகரினை தொடர்பு கொள்ளவும்.
3. தண்ணீர்ப்பந்தல்கள், சர்பத் கடைகள் மற்றும் ஐஸ்கிறீம் கடைகள் நடாத்துபவர்கள் அனுமதி பெறப்பட்ட கடைகளில் நீர்ப்பரிசோதனை அறிக்கை வைத்திருப்பவர்களிடம் இருந்து ஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்வதுடன் அதற்கான பற்றுச்சீட்டினையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.
4. ஆலயத்தினது சுற்றாடலில் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பச்சை குத்துதல் முற்றாக தடை
5. வர்த்தக நிலையங்கள், அன்னதான மடங்கள், தண்ணீர் பந்தல்களில் பயன்படுத்தப்படும் நீரானது குடிக்கத்தக்கது (நீர்ப்பரிசோதனை அறிக்கை) என்பதனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தவறும் பட்சத்தில் நகராட்சி மன்றத்தினால் வழங்கப்படும் குடிநீரினை மாத்திரமே பெறப்பட வேண்டும்.
6. பொதுச்சுகாதாரம் சார்ந்த விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை உற்சவ கால சுகாதார வைத்திய அதிகாரி பணிமணை நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
7. வர்த்தக நிலையங்கள் மற்றும் மடங்களிலும் தண்ணீர் பந்தல்களிலும் இருந்து வெளியேறும் திண்ம கழிவுகளை குப்பைத்தொட்டி கொண்டு ஓரிடத்தில் சேகரிப்பதுடன் அதனை உரியமுறையில் அகற்றுவதனை உறுதிப்படுத்த வேண்டும்.
8. ஆலயச் சூழலில் பிளாஸ்திக் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
9. பச்சை குத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
வியாபார அனுமதிப்பத்திரம்
10. காவடி குத்துபவர்கள் நகராட்சி மன்றத்தின் நடப்பாண்டிற்கான வியாபார அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன் தொற்றுநீக்கும் வசதியும் ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும்.(உபகரணங்கள் கொதிநீரிலிட்டு தொற்றுநீக்கும் வசதிகள்)
11. குத்தகைக்கு வழங்கப்படும் நிலங்கள் திருவிழா முடிவடைந்ததும் சுத்தமாக பேணப்படுவது ஆதன உரிமையாளரின் பொறுப்பாகும். ஆலய வளாகம் தவிர்ந்த தனியார் ஆதனங்களின் கழிவகற்றலை நகரசபை பொறுப்பேற்காது.
12. பொதுச்சுகாதாரம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
