குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சி! தமிழர்களையும் இணையுங்கள் - அரசிடம் கோரிக்கை
நாம் மௌனம் சாதிக்கும் பட்சத்தில் எமது மண்ணும், நிலங்களும், பூர்விக மரபுரிமைகளும் முற்றுமுழுதாக அபகரிக்கப்பட்டு வரலாறு சிதைக்கப்பட்டுவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரித்தார்.
தமிழ் மக்களின் மரபுரிமைகளையும் அடையாளங்களையும் திட்டமிட்டு அழிக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளின் ஓரங்கமாகவே குருந்தூர் மலைப்பகுதியில் பௌத்த விகாரைகள் காணப்பட்டதாக குறிப்பிட்டு அகழ்வாராய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை கருதவேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
அத்தோடு இந்த அகழ்வாராய்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின், அதில் யாழ். பல்கலைக்கழகத்தின்விரிவுரையாளர்களும் மாணவர்களும் கட்டாயமாக உள்வாங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தான் வலியுறுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குருந்தூர் மலை அடிவாரத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு எம்மை பொலிஸார் அனுமதிக்கவில்லை.
அமைச்சர் ஒருவர் அங்கு வருகை தருவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டிருந்தன. இராணுவத்தினரும் பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
அங்கு தைப்பொங்கல் தினத்தன்று மக்கள் தமிழர் முறைப்படி பண்டிகையைக் கொண்டாடியிருந்த நிலையில், அப்பகுதிகளை தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் அடையாளப்படுத்திக்கொண்டிருந்தனர்.
அமைச்சர் வருகை தந்து அதனைப் பார்வையிட இருப்பதாகக் கூறினார்கள். அதுமாத்திரமன்றி கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் அங்குவந்து தங்கியிருந்து ஆராய்வுகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் எமக்குத் தகவல்கள் கிடைத்தன.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களும் அப்பகுதியை ஆராயவிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும் இப்பணியில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் இணைந்து செயற்படுகின்றபோது, அதில் வெளிப்படைத்தன்மை பேணப்படும் என்பதே எமது அபிப்பிராயமாகும்.
யாழ். பல்கலைக்கழகத்தில் தாபிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டபோது தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து குரல்கொடுத்ததைப்போல இச்செயற்பாட்டிற்கு எதிராகவும் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும் என்றார்.