செங்கொடி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தியாகப் பெருந்தீ...!
ஒரு சில பெயர்கள் காலத்தால் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவை ஒரு காலகட்டத்தின் அரசியல் சூழலையும், மக்களின் உணர்வுகளையும், அதிகார வர்க்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட கூர்மையான கேள்விகளையும் நமக்கு எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
அப்படியான ஒரு பெயர் தோழர் செங்கொடி...
கடந்த 2011ஆம் ஆண்டு, பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனைக்கு எதிராகத் தமிழகமே கொதித்தெழுந்த காலம்.
அந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஆகஸ்ட் 28 அன்று காஞ்சிபுரத்தில் தன் இன்னுயிரை ஈகம் செய்தார் 21 வயதே நிரம்பிய தோழர் செங்கொடி.
அவர் தீயிட்டுக் கொளுத்தியது தன் தேகத்தை ஆனால் அது அந்த மூவரின் தூக்குக் கயிற்றைத்தான் எரித்தது.
அவரது ஈகம் தமிழகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கியது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வீதிக்கு வந்தனர்.
அதன் விளைவாகவே சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னாட்களில் மூவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விடுதலையிலும் முடிந்தது.
காலங்கள் உருண்டோடினாலும் செங்கொடி என்ற பெயர் நீதிக்கான போராட்டங்களில் ஒரு தணியாத நெருப்பாகச் சுடர்ந்துகொண்டே இருக்கும்.
இன்றைய நாளில் ஒரு இனமான பெரும் நெருப்பாக எரிந்த அந்த உன்னதமான ஆத்மாவை தியாகப் பெருந்தீயினை, ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் IBC தமிழ், கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |