செந்தில் பாலாஜி அதிரடி கைது - பெரும் அதிர்ச்சியில் தி.மு.க.வினர்
தமிழ் நாட்டின் மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று அதிகாலை சென்னையில் கைது செய்யப்பட்ட தகவல் கரூர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டின் மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சோதனையை தொடர்ந்து கைது

இந்தியாவின் மத்திய பொருளாதார சட்ட செயலாக்க அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட அமைச்சர்கள் மருந்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி கைதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளாார்.
இதன்போது திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் அமைச்சரின் சொந்த மாவட்டமான கரூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல்துறை பாதுகாப்பு

குறிப்பாக கரூர் பேருந்து நிலையம், மாவட்ட பா.ஜ.க. அலுவலகம், மனோகரா கோர்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சேர்ச் கோர்னர், வெங்கமேடு, லைட் ஹவுஸ் கோர்னர் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் தலைமையில், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் காவல்துறையினர் தமது ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று பொருளாதார சட்ட செயலாக்க அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.