செந்தில் தொண்டமானின் முயற்சிக்கு ஜப்பான் பாராட்டு
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜப்பானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷுன்சுகே மற்றும் டேக்கி கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று வெளியுறவு அமைச்சில் இன்று(22) இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் போது, இலங்கை – ஜப்பான் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை இருவரும் நினைவூட்டியதுடன் எதிர்காலத்தில் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, மாகாண ஆளுநர் என்ற வகையில் மாகாணத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஜப்பான் அரசு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், தங்களுடைய முயற்சியை ஜப்பான் அரசு பாரட்டுவதாகவும் ஷுன்சுகே டேக்கி செந்தில் தொண்டமானிடம் தெரிவித்துள்ளார்.
அதிபரின் வழிகாட்டல்
அதேவேளை, தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் சிறப்பாக உள்ளதாகவும் ஐ.எம்.எப். நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கும், கடன் மறுசீரமைப்புத் திட்டங்களின் போதும் அதிபரின் வழிகாட்டலின் பேரில் அர்ப்பணிப்புடன் இலங்கை நாட்டின் அதிகாரிகள் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடும் இணைந்து மீன்பிடித்துறையுடன் தொடர்புடைய துறைசார் தொழிலை மேம்படுத்துவது குறித்தும், கனிம வளங்கள் குறித்து ஆராய்ந்து அதனை செயற்படுத்த ஜப்பான் அரசு பங்களிப்பு அளிக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்கோரிக்கையை ஏற்று, அதற்கு சாதகமான பதிலளித்த ஷுன்சுகே டேக்கி ஜப்பான் தனது முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்தார்.
அத்துடன், இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க, ஜப்பான் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.
இதன்போது, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஜப்பான் தனது பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் ஆளுநரிடம் ஷுன்சுகே டேக்கி உறுதியளித்துள்ளார்.
