மோட்டார் சைக்கிள் விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் பலி
பாதுக்க இங்கிரிய வீதியில் ஸ்ரீ விஜய போதிராஜா பௌத்த நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் பாரவூர்தி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (17) மாலை இடம்பெற்றது.
உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர் தனது சீருடையுடன் மிரிஹானவில் இருந்து இங்கிரிய நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பின்னால் வந்த பாரவூர்தி மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குழந்தையை பார்க்க சென்றவேளை

மிரிஹான பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் அண்மையில் பிறந்த அவரது குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் தனது மனைவி வீடான கலவானைக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.