மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சியாக மாறிய முன்னாள் எம்.பி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றைய தினம் (27-07-2026) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் அவர் சாட்சியமளித்துள்ளார்.
இலஞ்சப் பணம்
இது தொடர்பில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெரியவருகையில், இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது சுமார் 100 கோடி ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் ஆணைக்குழு
இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |