மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வெள்ளைவான் கடத்தல்- சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!
வெள்ளை வான் கடத்தல் உட்பட கடந்தகால குற்றச் செயல்கள் பற்றி துரித விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு இன்றைய தினம் பிணை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தாக்கல் செய்த பிணை கோரிக்கை தொடர்பான மனு மீதான விசாரணை ஸ்ரீலங்கா மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது 25000 ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர்கள் இருவருக்கும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாத வகையில் நீதிமன்றத்தினால் தற்காலிகத் தடையுத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சந்தேக நபர்கள் தங்கியிருக்கின்ற இல்லங்களின் முகவரிகள் மாற்றப்பட்டால் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு கொழும்பு - பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் குறித்து போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் கைதுசெய்யப்பட்டு, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்காவின் தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்த போது தற்போதைய அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமைபுரிந்த காலகட்டத்தில் வெள்ளை வானில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் இந்த இருவருமே துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைகளுக்கு மத்தியில் கடந்த நல்லாட்சியின் காலத்தில் ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த முன்னாள் தளபதி, ஊடகப் பேச்சாளர் என 16 சந்தேக நபர்கள் வெள்ளை வான் கடத்தல் வழக்கில் கைதாகியிருந்தனர். இவர்களது விசாரணைகளில் ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி தரும் பரபரப்பு தகவல்கள் வெளியாகிவந்தன.
எனினும் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வெள்ளை வான் விசாரணைகளில் பல தகவல்களை வெளிகொணர நடவடிக்கை எடுத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் மற்றுமொரு அதிகாரியான கந்தப்பா நிஸாந்த டி சில்வா சுவிட்ஸர்லாந்து நாட்டிற்குத் தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.