ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
கடந்த ஆண்டு சிவராத்திரி நாளில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் நடந்த அடக்குமுறைகளும் அடாவடிகளும் நம் நினைவிடுக்குளில் மேலெழுகின்றன.
ஆசியாவின் ஆச்சரியமாக இருக்கும் இலங்கைத் தீவில், ஆலயங்கள் மீது தாக்குதலை செய்வதும், தெய்வங்கள் மீது படுகொலைகளை நிகழ்த்துவதும், ஆலயங்களை ஆக்கிரமிப்பதும் மற்றும் சில ஆச்சரியங்களாகும்.
அந்த வகையில் இனப்படுகொலைத் துயரினால் எல்லா இரவுகளும் சிவராத்திரி ஆக்கிவிட்ட ஈழ நிலத்தில், சிவபூமி எனப்படுகிற ஈழ நிலத்தில் சிவராத்திரி முக்கியமானதொரு வழிபாடகும்.
சிவபூமியில் சிவராத்திரி
ஈழத்தில் உள்ள சிவாலங்களில் மாத்திரமின்றி அனைத்து சைவ ஆலயங்களிலும் இன்றைக்கு மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய நாளில் விரதமிருந்து இரவு முழுவதும் உறங்காதிருந்து, மூன்றுவேளைப் பூசைகளை முடித்து சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
தமிழகத்தில் திருவெண்ணாமலை ஆலயத்தைப்போல ஈழத்தில் திருக்கேதீஸ்வரத்தின் வழிபாடுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
சிவராத்திரி என்பது சிவனிடத்தில் ஒடுங்கிய உலகை மீட்க உமாதேவியார் நோன்பிருந்த காலம் என்றும் பிரம்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான ஆணவத்தை அடக்கி சிவன் அமைதியடைந்த நாள் என்றும் ஐதீகங்கள் பலவுண்டு.
இன்றைய நாளில் அண்டத்தில் உள்ள கதிர் அலைகளின் தாக்கத்தால் மனித உடலில் உள்ள சுரப்பிகள், அமிலங்கள் வெளியேற்றத்தில் மாறுபாடு அடைவதாகவும் அப்போது, உறங்காமல் விடிய விடிய விழித்திருந்தால் அவற்றின் செயல்பாடு இரத்த அணுக்களை பாதிக்காது என்றும் எளிதில் செமிபாடடையும் உணவுகளை மட்டும் குறைந்த அளவில் சாப்பிட்டு அமைதியாக இருப்பது உடலுக்கு நல்லது என்றும் அறிவியல் பூர்வமான விளக்கம் கூறப்படுகிறது. இயற்கையை வெல்லும் உபாயமே சிவராத்திரி எனப்படுகிறது.
சிவராத்திரிகளாகிய இரவுகள்
ஈழப்போராட்டத்தில் நோன்புப் போராட்டத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. திலீபன், அன்னை பூபதி ஆகியோர் தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை நீத்தவர்கள்.
சிவனுக்கு இன்றைய ஒரு நாள் தான் சிவராத்திரி. ஈழத் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரியே. ஈழத்தில் வரும் இரவுகள் எல்லாம் சிவராத்திரியே.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கவும் சொந்த நிலத்தை மீட்கவும் நீதிக்காகவும் எங்கள் மக்கள் பனியிலும் குளிரிலும் உறங்காதிருக்கின்றனர். ஈழ நிலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்காக தாய்மார்கள் உறங்காதிருக்கின்றனர்.
போரில் கொல்லப்பட்டவர்களுக்காக உறங்க முடியாது விழித்தே கிடக்கும் மக்களுக்கு எல்லா நாட்களும் சிவராத்திரியே. நேற்றைய தினம்கூட பத்திரிகையின் முன் பக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைத் தேடிப் போராடிய தாயொருத்தி தன் விழிகளை நிரந்தரமாக மூடியிருந்த செய்தி வெளியாகியிருந்தது.
பின்னிரவுகளில் புலம்பும், தனித்து அழும் உறக்கமற்று அந்தரிக்கும் ஈழத் தாய்மார்களும் கணவனைத் தேடும் பெண்களும் தந்தை, தாய்மாரைத் தேடும் குழந்தைகளும் இந்த நாளில் நினைவுக்கு வந்துவிடுகின்றனர்.
ஈழத்தில் சைவம்
நாங்கள் சைவர்கள். நீங்கள் என்ன மதம் என்று யாராவது கேட்டால் நான் வைசம் என்றே பதில் அளிப்போம்.
இலங்கை அரசு எங்களை அழிப்பது இந்துக்கள், சைவர்கள் என்ற அடையாளங்களின் பொருட்டுமே.
உண்மையில் நாம் இந்து மதவாத்தினாலும் பௌத்த சிங்களவாதத்தினாலும் இரு முனைகளாலும் அழிக்கப்படும் சைவர்கள். எங்கள் ஆலயங்கள் மீது விமானங்கள் குண்டுகளை கொட்டின.
போரின்போது கிறீஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிகளுடன் எங்கள் ஆலயங்களும் அழித்து நொருக்கப்பட்டன.
இன்றைக்கு தென்னிலங்கையில் உள்ள சைவ ஆலயங்கள் எல்லாம் முகவரி இழந்துபோய்விட்டன. கதிர்காமம் இன்றைக்கு கதிர்காம என்றாகிவிட்டது.
1000 வருடங்களின் முன்னர் சோழ மன்னன் கட்டிய பொலனறுவைச் சிவன் கோயிலைப் பார்க்கும் போது அழிந்தும் அழியாமலும் இருக்கிற ஈழத் தமிழ் இனம் போல உள்ளது.
தென் பகுதியில் இருந்த சைவ அடையாளங்களை அழித்தும் துடைத்தும் திரித்தும் வந்த சிங்களப் பேரினவாத மதவாதிகள் வடக்கு கிழக்கு எங்கும், சைவ ஆலயங்களின் அருகிலும் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் வைத்து தமிழ் பண்பாட்டு அழிப்பை மேற்கொள்ளுகின்றனர்.
சிவபூமி எனப்படும் ஈழம்
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் திருக்கேதீஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரம்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர்.
ஈழம் தொன்மையான சைவ மரபுகளை கொண்ட நாடு. ஈழமெங்கும் பரவிக் காணப்படும் ஈச்சரங்கள் இதற்கு தக்க சான்றுகளாக உள்ளன.
வரலாறு முழுதும் தமிழ் இனம் அழிக்கப்பட்டபோது சைவ ஆலயங்களும் அழிக்கப்பட்டன. பிந்தைய காலத்தில் உலகமயமாக்கல் சூழலில் ஆலயங்களுடனான நெருக்கமும் குறைந்தது.
தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான பண்பாட்டுப் புரட்சியின்போது சைவ மரபுகள் குறித்த கருத்துக்களும் வெளிப்பட்டன.
பகுத்தறிவுத் தந்தை பெரியாரை பெற்றெடுத்த தமிழகம் சைவ மரபுகள் குறித்தும் சிவன் குறித்தும் சிவபுராணம் குறித்தும் சிந்திக்கும் ஒரு சூழ் நிலை வந்திருக்கிறது என்றால் முற்றாக சிங்கள மதவாத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத் தமிழர்களாகிய நாம் அது குறித்து மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உண்டு.
தொன்மங்களை நோக்கி
சைவ ஆலயங்களின் அருகே புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் திட்டமிட்டு எழுப்பப்பட்டு, வரலாறும் பண்பாடும் அழிக்கப்படுகிறது.
பண்பாடு அழியும்போது வரலாறும் இனமும் அழிகிறது. இன்றைக்கு சோழர்களுக்கு முந்தைய தலங்களாக திருக்கேதீஸ்வரமும் திருக்கோணேஸ்வரமும் எங்கள் வரலாற்றை இடித்துரைக்கும் தலங்களாக உள்ளன. இதன் காரணமாகவே திருக்கேஸ்வரத்தையும் திருக்கோணேஸ்வரத்தையும் சுற்றி மதப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
ஈழத்தில் இன்று வசிக்கிற மக்கள், இளைஞர்கள் ஆலயங்களை நோக்கியும் எங்கள் வரலாறு நோக்கியும் தொன்மம் நோக்கியும் நகர வேண்டிய அவசியமுண்டு.
முழுக்க முழுக்க பல்வேறு பொறிகளால் சுய அடையாளங்களும் பண்பாடும் அழிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் மனம் அவதியுறும் இன்றைய கால கட்டத்தில் எமது பண்பாடாக அமைந்த அமைதி தரும் ஆலயங்களுக்குள் இருப்பதும் எமது கலை கலாசார நிகழ்வுகளை அங்கு முன்னெடுப்பதும் மிகுந்த அவசியமாகிறது.
ஏனெனில் அதன் வாயிலாக நம்மை உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்துவதுடன் இம் மண்ணின் இருப்பையும் நிலைபெறச் செய்ய இயலும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 26 February, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 மணி நேரம் முன்
