மணலாறு பிரதேச செயலக சர்ச்சை! விசாரணை நடத்த உபாலி சமரசிங்க கோரிக்கை
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் என கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநருக்கு தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.
தவிசாளர் கிருஸ்ணவேணி
இதன்போது கூட்டத்தில் கலந்துகொள்ளச்சென்ற வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவால் கூட்டத்தில்வைத்து பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மணலாறு அபிவிருத்திக்குழு கூட்டம் காலை 9.30 மணிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருந்தேன்.
கூட்டம் ஆரம்பித்து 30 நிமிடங்களின் பின்னர் பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா வடக்கின் தவிசாளர்களுக்கிடையில் விவதாம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்போது மேடையின் முன் வரிசையில் அமரவேண்டும் என தவிசாளர் கோரிக்கை விடுப்பதாக பிரதேச செயலாளர் என்னிடம் வந்து கூறினார்.
இதனையடுத்து மாகாணசபை உள்ளூராட்சி அமைச்சின் விதிமுறைகளின் படி மேடையில் அமர்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அனுமதி உள்ளது.
மொழிபெயர்ப்பு தேவை
இது தொடர்பாக நான் விளக்கமளித்திருந்தேன். இருப்பினும் வலுக்கட்டாயமாக மேலே வந்து அவர் எனக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

நான் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கூட்டத்தை ஆரம்பித்திருந்தேன். இதன்போது மொழிபெயர்ப்பு தேவையா என்று அங்கிருந்த மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டிருந்தேன். அவர்கள் தேவையில்லை என்பதால் கூட்டம் அப்படியே நடாத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த தவிசாளர் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் ஒலிவாங்கி வேண்டுமா என்று கேட்டபோது அவர் கோபத்துடன் என்னிடம் இருந்து அதனை வாங்கினார். பின்னர் அவர் உரையாற்றினார்.
நெடுங்கேணியில் நடைபெற்ற கிபிள் ஓயாவிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக அவர் குறிப்பிட்டார். அதற்கு தலைமை தாங்கியமையாலேயே தன்னை நீங்கள் பழிவாங்குவதாக அவர் கூறினார். தனக்கு மேலே இருக்க உரிமை உள்ளது. தான் ஒரு பிரதேச சபையின் தவிசாளர் என்று கூறினார். எனக்கு சிங்களம் தெரியாது. அனைத்திற்கும் மொழி பெயர்ப்பு வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்” என்றார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |