புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு
ஜனாதிபதி அநுர புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செய்தியையோ அல்லது அவர்களது தேவைகளையோ நிறைவேற்றுகின்றாரோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) குற்றச்சாட்டியுள்ளார்.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கும் அரசமைப்புக்கும் எதிராகச் செயற்பட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தினார்.
இன்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஈட்டப்பட்ட யுத்த வெற்றி
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "சுதந்திர தின அணிவகுப்பின் போது இராணுவப் படைப் பிரிவுகளை முறையாக அறிமுகப்படுத்தும் மரபு இம்முறை மீறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரிய உயிர்த் தியாகத்தால் ஈட்டப்பட்ட யுத்த வெற்றியையும் இராணுவத்தின் கௌரவத்தையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறுமைப்படுத்துகின்றார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
"ஜனாதிபதி அருகில் கடந்து செல்லும் போது ஒவ்வொரு இராணுவப் பிரிவின் விசித்திரங்கள் மற்றும் சாதனைகள் வழக்கமாகச் சொல்லப்படும். ஆனால் இம்முறை அத்தகைய கௌரவம் வழங்கப்படாமல் 'டித்வா' சூறாவளி பற்றி மட்டுமே பேசப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்த காலத்தின் போது தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகள் முன்னிலையிலேயே இந்தச் செயல் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் கோரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செய்தியையோ அல்லது அவர்களது தேவைகளையோ நிறைவேற்றுகின்றாரோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
இனங்களுக்கிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் விடயங்களை முன்வைக்க வேண்டாம் எனப் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இந்த அரசு யாருடையதோ ஒரு தனிப்பட்ட தேவைக்காகச் செயற்படுகின்றது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |